குஷ்புவுக்கு ஆதரவு திரட்டுகிறார்: சென்னையில் அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம்


குஷ்புவுக்கு ஆதரவு திரட்டுகிறார்: சென்னையில் அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 2 April 2021 9:52 PM GMT (Updated: 2 April 2021 9:52 PM GMT)

சென்னையில் இன்று பிரசாரம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஷ்புக்கு ஆதரவு திரட்டுகிறார். மேலும் ராமநாதபுரம், நெல்லை பொதுக்கூட்டங்களிலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.

சென்னை, 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு ஆதரவு திரட்டினார்.

இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஆயிரம்விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் குஷ்புவுக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார். தேனாம்பேட்டை சிக்னலில் இருந்து திறந்த வேனில் அவர் பாண்டிபஜார் நோக்கி சாலையில் பேரணியாக செல்கிறார்.

தேர்தல் பிரசார கூட்டம்

வழியில், அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமித்ஷா ஆதரவு திரட்டி பேசுகிறார். சென்னை பிரசாரத்தை முடித்துக்கொண்டு அவர் காரில் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தூத்துக்குடி செல்லும் அமித்ஷா, ராமநாதபுரம், நெல்லையில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

சென்னையில் இன்று நடக்கும் பேரணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

Next Story