தமிழக சட்டசபை தேர்தல்: தோராயமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி


தமிழக சட்டசபை தேர்தல்: தோராயமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
x
தினத்தந்தி 6 April 2021 3:07 PM GMT (Updated: 6 April 2021 3:14 PM GMT)

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தோராயமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேற்குவங்காளத்தில் 3-வது கட்ட தேர்தலும், அசாமில் 3-வது இறுதிகட்ட தேர்தலும் நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3-ம் பாலினத்தவர் 7192 பேர் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கெல்லாம் வாக்களிக்கும் ஆர்வத்தில் வாக்காளர்கள் குவியத்தொடங்கினர்.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என உறுதி செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். அவ்வாறு முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குப்பதிவு மையத்திலேயே முகக்கவசம் வழங்கப்பட்டது.

பின்னர் அவர்களுடைய அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். ஓட்டு போட்டு முடிந்ததும் கையுறையை கழற்றி போட தனியாக பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. ஓட்டுப்பதிவு தொடங்கியதும் சில வாக்குச்சாவடிகளில் ஓட்டு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் மாற்று எந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. 

மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்கு மேல் 7 மணி வரை கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யோகமாக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 7 மணியுடன் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அவை கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவைகள் அறைகளில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்படும். அந்த இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தோராயமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 7 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து மண்டல அலுவலருக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால், முழுமையான வாகுப்பதிவு சதவீதம் வரவில்லை. தொலைபேசி மூலம் வாங்கிய தகவலின்படி 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணி அளவில் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு எண்ணிக்கை தெரியவரும். தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது” என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Next Story