தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி


தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி
x
தினத்தந்தி 2 May 2021 7:59 AM GMT (Updated: 2 May 2021 7:59 AM GMT)

தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் நீடித்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. 

சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
 
முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தில் இருந்தது. தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 2.15% சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது. 

2019-ஆம் ஆண்டு 22 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3.15% வாக்குகளை பெற்றது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 3.9% வாக்குகளை பெற்றது. இதனிடையே 2019 உள்ளாட்சி தேர்தலில் ராஜாக்காமங்கலம் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தற்போது 2021 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது. 

இதன்படி சீமானின் நாம் தமிழர் கட்சி, பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. திமுக, அதிமுக வேட்பாளர்களின் வாக்குகளுடன் ஒப்பிடும் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வாக்கு குறைவுதான். ஆனால், அவர்தான் தற்போது மூன்றாம் இடம் பிடிக்கிறார். இதன் அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை உள்ளன.

Next Story