ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்க மாயாவதி, மம்தா பானர்ஜிக்கு திடீர் அழைப்பு + "||" + RSS. Take part in the meeting Mayawathi, Mamata Banerjee's sudden call
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்க மாயாவதி, மம்தா பானர்ஜிக்கு திடீர் அழைப்பு
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜிக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் வருகிற 17–ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மாநில முதல்–மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆச்சரியமளிக்கும் விதமாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு நேற்று அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் மாயாவதி நிச்சயம் பங்கேற்பார் என்றும் அதேநேரம் மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் இதில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை எனவும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் கூறின.
பா.ஜனதா தலைவர்கள் சிலர் தெரிவித்த யோசனையின்படி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.