இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடமாட்டோம் பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி


இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடமாட்டோம் பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி
x
தினத்தந்தி 3 Feb 2019 1:35 PM GMT (Updated: 3 Feb 2019 1:35 PM GMT)

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடமாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கூறியுள்ளார்.


இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி,  காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிரிவினைவாதிகள் தலைவருடன் தொலைபேசி மூலமாக பேசினார். அப்போது காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண தங்கள் அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடியதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், பாகிஸ்தான் தூதரையும் அழைத்து எச்சரிக்கையும் விடுத்தது.

இந்நிலையில் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடமாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கூறியுள்ளார். 

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷாமுகமது குரேஷி பேசுகையில், “இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் எண்ணம் பாகிஸ்தானுக்கு கிடையாது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவருடன் பேசியதை இந்தியா பெரிதுபடுத்த வேண்டாம். தங்கள் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு பாகிஸ்தானை குறை கூறுவதை இந்தியா முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இந்தியா தாமதப்படுத்துகிறது. 
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்தியாவில் அமையும் புதிய அரசு பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட விரும்பினால், பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியுள்ளார்.


Next Story