மும்பையில் உள்ள சிட்டி சென்டர் மாலில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகபடா என்ற நகரில் சிட்டி செண்டர் மால் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த மாலில் நேற்று இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் லேசாக பற்றிய தீ, நேரம் செல்ல செல்ல கொழுந்து விட்டு எரிந்தது.
இதையடுத்து, அதிகாலை 2.41 மணியளவில் தீ அணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர். லெவல் -5 என்ற அளவுக்கு தீ விபத்து இருந்ததால், மாலின் அருகில் இருந்த 55 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த மக்கள் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
24 தீ அணைப்பு வாகனங்களின் உதவியோடு தீயை அணைக்கும் பணியில் சுமார் 250 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அருகாமையில் உள்ள கட்டிடங்களில் வசித்த மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியின் போது தீ அணைப்பு வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.