சென்னைக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அபுதாபி,
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 41வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
காயம் காரணமாக பிராவோ விலகியுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தொடரில் முதல் முறையாக தாஹிருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மூன்று முறை சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7-ல் தோல்வியும், 3-ல் வெற்றியும் கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.