ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்து அரசுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
லண்டன்,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதில் ஒரு சில நிறுவனங்களின் மருந்துகள், இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அந்நாட்டின் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ள மருந்து அதிக நம்பகத்தன்மை அளிப்பதாக கூறப்படுகிறது. அஸ்ட்ரா ஜெனேகா, மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுடன் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு உடன்பாடு செய்துள்ளது.
கடந்த மே மாதம் இங்கிலாந்து அரசுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 100 மில்லியன் தடுப்பூசிகள் தயாரித்து கொடுப்பதாகவும், செப்டம்பர் மாதம் 30 மில்லியன் தடுப்பூசிகள் தயாராகிவிடும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி முன்னர் குறிப்பிட்ட அளவிற்கான மருந்துகளை தயாரிப்பதில் தாமதம் ஏற்படுள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழு தலைவர் கேட் பிங்காம் கூறுகையில், “மருந்து தயாரிப்பு பணியில் ஏற்படும் பின்னடைவுகள், மறு ஆய்வுகள் உள்ளிட்ட காரணங்களால் தடுப்பூசிகள் தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், “இது போன்ற தடுப்பூசிகளை தயாரிக்க வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை முன்பு இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லாமல் மிக அதிக வேகத்தில் மருத்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் இங்கிலாந்து அரசுக்கு 4 மில்லியின் மருந்துகள் வழங்கப்பட்டுவிடும்” என்று தெரிவித்துள்ளார்.