திமுக இன்று நடத்த இருக்கும் கிராம சபை கூட்டத்திற்கு மறுப்பு தெரிவித்து மரக்காணம் காவல் ஆய்வாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
விழுப்புரம்,
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக நிர்வாகிகள் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை சந்தித்து பேசினர்.
இதனையடுத்து இன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்குபெறும் கிராம சபை கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று இரவு வெளியிடப்பட்ட அறிவிப்பில், கிராம சபை என்ற பெயரில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தனி நபர்களுக்காகவோ அல்லது அரசியல் கட்சிகளின் ஆதாயத்திற்காகவோ கிராம சபை கூட்டங்களை நடத்தக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் மக்கள் கிராம சபை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி கேட்டு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான், மரக்காணம் காவல்துறைக்கு கோரிக்கை மனு அளித்தார். இந்நிலையில் திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக செஞ்சி மஸ்தானுக்கு காவல்துறை ஆய்வாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இருப்பினும் கிராம சபை கூட்டம் நிச்சயம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரக்காணம் பகுதிக்கு வர உள்ளார். இதனை முன்னிட்டு அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.