குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காக பள்ளி கூடங்கள் இன்று திறக்கப்பட்டு உள்ளன.
ராஜ்கோட்,
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்பின் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் இந்த தொற்று பரவியது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச்சில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
நாட்டில் சமீப காலங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளி கூடங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் 10, 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காக இன்று பள்ளி கூடங்கள் திறக்கப்படுகின்றன. பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முக கவசம் அணிந்து, கைகளை தூய்மைப்படுத்தி, வெப்ப பரிசோதனை செய்த பின்னர் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்காக உள்ள வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக வகுப்புகளுக்கு சென்றனர். வகுப்பறையிலும் சமூக இடைவெளி விட்டு, அமர வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதுபற்றி ஆமதாபாத் நகரில் உள்ள பள்ளி இயக்குனர் ஒருவர் கூறும்பொழுது, கடந்த 10 மாதங்களுக்கு பின் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.
நாங்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா 10 மாணவர்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தி பிரித்து உள்ளோம். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.