பனாஜி,
விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் மத்திய மந்திரி ஸ்ரீபாதநாயக்கை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்தார். மேலும், பிரதமர் நரேந்திரமோடி, தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரிடம் நலம் விசாரித்தார்.
விபத்தில் சிக்கிய மத்திய மந்திரிமத்திய ஆயுஷ் மற்றும் ராணுவ துறை ராஜாங்க மந்திரி ஸ்ரீபாத நாயக் (வயது 68) ஆவார்.
கோவா தொகுதி எம்.பி.யான இவர் கடந்த 11-ந் தேதி மனைவி விஜயா நாயக், உதவியாளர்கள் தீபக் ராம்தாஸ், காய்கிரண் தேசியா, பாதுகாப்பு போலீஸ்காரர் துக்காராம் ஆகியோருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, கோவாவுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது. இதில் மந்திரி ஸ்ரீபாதநாயக்கின் மனைவி விஜயா நாயக், உதவியாளர் தீபக் ராம்தாஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்ரீபாதநாயக் உள்ளிட்ட எஞ்சியோர் படுகாயம் அடைந்தனர்.
வெங்கையா நாயுடு பார்த்தார்இவர்களில் ஸ்ரீபாதநாயக், கோவா கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கோவா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். அவரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு கண்காணிக்கிறது. தற்போது அவரது உடல்நிலை நன்றாக தேறி வருகிறது.
இந்த நிலையில், கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று காலை 10.20 மணிக்கு கோவா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் மத்திய மந்திரி ஸ்ரீபாதநாயக்கை சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும், அந்த ஆஸ்பத்திரி டீன் சிவானந்த் பண்டேகர் மற்றும் ஸ்ரீபாதநாயக்குக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்களையும் அவர் சந்தித்து பேசினார்.
தொலைபேசியில் மோடி...இதே போன்று பிரதமர் நரேந்திரமோடி, ஸ்ரீபாதநாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தார். அவரை உடல்நலத்தை கவனமுடன் பார்த்துக்கொள்ளுமாறு பரிவுடன் அறிவுறுத்தினார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.