மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு


மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 6 Nov 2021 8:11 PM GMT (Updated: 6 Nov 2021 8:11 PM GMT)

மும்பை கண்டிவாலி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 14-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையின் வடக்கு பகுதியில் உள்ள கண்டிவாலி என்ற பகுதியில் ‘ஹன்சா ஹெரிடேஜ்’ என்ற பெயரில் 15 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 14-வது மாடியில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. 

இது குறித்து தகவலறிந்து, அந்த பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், கட்டிடத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இறங்கினர். அதே நேரம் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் தீ விபத்தில் சிக்கிய 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் செல்லும் வழியிலே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story