போபால் மருத்துவமனை குழந்தைகள் வார்டு தீ விபத்து : 3 குழந்தைகள் பலி
போபாலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. அம்மாநில மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
இந்த நிலையில் இந்த தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி ஏசிஎஸ், முகமது சுலேமான் விசாரணை நடத்துவார்.
மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த மூன்று குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை.
குழந்தைகள் உலகை விட்டு பிரிந்து சென்றது தாங்க முடியாத வேதனை. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story