“ஆக்கிரமிப்பு குறித்து தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆக்கிரமிப்பு குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் ஆக்கிரமிப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்குவதாக பலர் குற்றச்சாட்டு வைப்பதாக தெரிவித்தார்.
அவ்வாறு குற்றச்சாட்டை முன் வைப்பவர்கள் ஆக்கிரமிப்பு குறித்து தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தற்போது 88 லட்சத்து 88 ஆயிரத்து 518 தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்த அவர், இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி, தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story