வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 22 Nov 2021 12:06 AM GMT (Updated: 22 Nov 2021 12:06 AM GMT)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டிய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு,காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் ஒரு சில இடங்களிலும், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் இன்னும் மழைநீர் வடியவில்லை.

இதனை வெளியேற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. இந்தநிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

தெற்கு அந்தமான கடற்பகுதியில் (3.1 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று (திங்கட்கிழமை) பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23-ந் தேதி (நாளை) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

புதுச்சேரியில் 10 செ.மீ. மழை

24-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில்கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தெற்கு உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி புதுச்சேரியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக நந்தியார் தலை, அவலூர்பேட்டையில் தலா 9 செ.மீ., வேப்பந்தட்டை, பொன்னை அணை, வானூர், காட்பாடியில் தலா 8 செ.மீ., லால்குடி, செந்துறை, நாவலூர்கோட்டப்பட்டு, பெரிய அணைக்கட்டில் தலா 7 செ.மீ., சேத்தியாத்தோப்பு, மஞ்சளாறு, வேலூரில் தலா 6 செ.மீ., திருக்காட்டுப்பள்ளி, ஆலங்காயம், பள்ளிப்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், போளூரில் தலா 5 செ.மீ., திருவையாறு, மணப்பாறை, வடபுதுப்பட்டு, மேலாளத்தூர், பண்ருட்டி, நாட்றம்பள்ளி, வலங்கைமான், செஞ்சி, செங்கம், குடியாத்தம், பரங்கிப்பேட்டையில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Next Story