மது போதையில் நண்பன் கன்னத்தில் அறைந்ததில் உயிரிழந்த நபர்


மது போதையில் நண்பன் கன்னத்தில் அறைந்ததில் உயிரிழந்த நபர்
x
தினத்தந்தி 24 Nov 2021 3:10 AM GMT (Updated: 24 Nov 2021 3:10 AM GMT)

மது போதையில் நண்பன் கன்னத்தில் அறைந்ததில் நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் குர்லா பகுதியை சேர்ந்தவர் ராகுல் கும்ளே (27). இவரது நண்பர் அவினாஷ் பாலிகர். 

நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு விபி நகர் பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிட்டத்தில் மது குடித்துள்ளனர். அப்போது ராகுல் கும்ளேக்கும், அவினாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் கும்ளே தனது நண்பரான அவினாஷின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார். அந்த ஒற்றை அறையால் சுயநினைவின்றி அவினாஷ் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த கும்ளே தனது நண்பரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவினாஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறினார்.

இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் ராகுல் கும்ளேவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

Next Story