அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Nov 2021 5:39 AM GMT (Updated: 24 Nov 2021 5:40 AM GMT)

சென்னை ராயப்பேட்டையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

சென்னை

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இந்த தேர்தல் நடப்பதால், வெற்றியை கோட்டைவிட்டு விடக்கூடாது என அ.தி.மு.க. நினைக்கிறது. வெற்றிக்கான வியூகம் வகுப்பதற்காக  இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று  காலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில், அவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கட்சியின் வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்வது?, ஒரே இடத்துக்கு பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்தால், அதை எந்த முறையில் அணுகுவது? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இதேபோல், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்று சொல்லிக்கொண்டு சசிகலாவும் சுற்றுப் பயணம் செய்து வருவதால், அதன் தாக்கம் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது குறித்தும் முக்கியமாக பேசப்பட இருக்கிறது. எனவே, இன்று நடைபெறும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story