கரூர் பாலியல் புகார்: மாணவி படித்த பள்ளி ஆசிரியர் தற்கொலையால் பரபரப்பு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Nov 2021 6:26 PM GMT (Updated: 24 Nov 2021 6:26 PM GMT)

கரூரில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பமாக,, மாணவி படித்த பள்ளிஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கரூர், 

கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி, வெண்ணெய்மலை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய அவர் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுதொடர்பாக வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.

அந்தக் கடிதத்தில், ”பாலியல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பொண்ணு நானாதான் இருக்கணும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வைச்சாங்கன்னு எனக்குச் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கெடச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணணும்னு ஆசை. ஆனா முடியல. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி” என எழுதிக் கையெழுத்திட்டிருந்தார்.  இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட நபர் இவர்தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story