பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்களுக்கு பரோல்: தமிழக அரசு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Nov 2021 7:03 PM GMT (Updated: 24 Nov 2021 7:03 PM GMT)

பரோல் முடிந்து இன்று சிறைக்கு செல்ல இருந்த நிலையில் அவருக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சிறுநீரகத் தொற்று, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக பரோல் வழங்க வேண்டி அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பியிருந்தார். மனுவை பரிசீலித்த முதல்வர் 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 28-ந் தேதி சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த காவலுடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு பலத்த காவலுடன் சென்று கையெழுத்திட்டு வந்தார். மேலும் டாக்டர்ககளின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் பொருள் காலம் முடியும் தருவாயில் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தார். அதன்படி 5 முறை பரோல் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிந்து சென்னை புழல் சிறைக்கு பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட இருந்தார்.

இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மேலும் பரோல் நீட்டிக்க மனு அனுப்பி இருந்தார். அதனை பரிசீலித்த தமிழக அரசு பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து நேற்று தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story