சென்னை: ஓடும் காரில் நடன பெண்ணுக்கு பாலியல் தொல்லை


சென்னை: ஓடும் காரில் நடன பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 24 Nov 2021 10:06 PM GMT (Updated: 25 Nov 2021 4:56 AM GMT)

சென்னையில் ஓடும் காரில் நட்சத்திர ஓட்டல் நடன பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டர் மகன் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 2 என்ஜினீயர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னை,

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 24). இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவரது தந்தை வெளிநாட்டில் டாக்டர் தொழில் செய்கிறார். கவுதம் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் தீபக், சக்தி ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரவு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இவர்கள் தங்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவதற்கு நடன பெண் ஒருவரை பணம் கொடுத்து அழைத்து சென்றிருந்ததாக தெரிகிறது. அந்த நடன பெண் திருமணமாகாதவர். கோயம்பேட்டை சேர்ந்த அவர், பணம் வாங்கி கொண்டு விருந்து நிகழ்ச்சியில் ஆண்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவதை தொழிலாக செய்து வந்தார்.

கவுதம் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை நடனமாட அழைத்து சென்றிருந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு நடன நிகழ்ச்சி முடிந்ததும், நடன பெண்ணை தங்களது காரில் கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டில் இறக்கிவிட்டுவிடுவதாக கவுதம் தெரிவித்து இருந்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த நடன பெண் காரில் பயணித்தார்.

காரில் வைத்து, கவுதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து நடன பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. கார் நுங்கம்பாக்கம், இலங்கை தூதரக அலுவலகம் அருகில் வரும்போது, நடன பெண் கூச்சல் போட்டு கத்தினார். என்னை காப்பாற்றுங்கள் என்ற அலறல் சத்தம் அந்த காரில் இருந்து கேட்டது. கார் மெதுவாக சென்றது. இலங்கை தூதரக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காரை மடக்கினார்கள்.

பின்னர் காருக்குள் இருந்த நடன பெண் மற்றும் கவுதம், அவரது நண்பர்கள் தீபக், சக்தி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது நடனப்பெண் கூச்சல் போட்டு அழுது, என்னை கெடுக்க பார்க்கிறார்கள் என்றார். பின்னர் திடீரென்று கவுதம் மற்றும் அவரது நண்பர்களை தனது செருப்பால் நடன பெண் அடித்ததாக தெரிகிறது.

இதற்குள் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு போலீஸ் படையுடன் அங்கு சென்றார். நடன பெண்ணை ஆயிரம்விளக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். கவுதம் மட்டும் போலீசார் கையில் மாட்டினார். அவரது நண்பர்கள் தீபக், சக்தி இருவரும் போலீசார் கையில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர். அவர்களும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் என்று கூறப்படுகிறது.

நடன பெண் கொடுத்த புகார் அடிப்படையில் கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் தீபக், சக்தி ஆகியோர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த கவுதம் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story