ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை அரசுடைமை ஆக்கியது செல்லாது - சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு


ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை அரசுடைமை ஆக்கியது செல்லாது - சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 12:11 AM GMT (Updated: 25 Nov 2021 12:36 AM GMT)

‘ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை அரசுடைமை ஆக்கியது செல்லாது’ என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அப்போதைய அ.தி.மு.க., அரசு முடிவு செய்தது.

அரசாணைகளை எதிர்த்து வழக்கு

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு, வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களை அரசுடைமையாக்கியது. இதற்காக பல அரசாணைகளை பிறப்பித்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் தனித்தனியாக 3 வழக்குகளை தாக்கல் செய்தனர்.

சட்டவிரோதம்

இந்த வழக்கை நீதிபதி என்.சேஷசாயி விசாரித்தார். அப்போது, தீபா மற்றும் தீபக் சார்பில் வக்கீல்கள் சுதர்சனம், சுந்தரராஜன், தொண்டன் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி, “மனுதாரர்கள் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகள். தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை. வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த உத்தரவை செல்லாது என அறிவிக்க வேண்டும். வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும். வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட மனுதாரர்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சொத்துக்கு 67.90 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட கோர்ட்டில் அரசு டெபாசிட் செய்தது சட்டவிரோதம்” என்று வாதிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் உள்ளிட்டோர் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சேஷசாயி, கடந்த ஏப்ரல் 24-ந்தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

தீர்ப்பு

இந்தநிலையில், இந்த தீர்ப்பை நீதிபதி நேற்று பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

இந்த சொத்துக்கு அதிபதியான ஜெயலலிதா ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்து, படிப்படியாக மேலே வந்து முதல்-அமைச்சர் பதவியை அடைந்தவர். திருமணமாகாத ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லை. அரசு முறையில் அவரது உடல் அடக்கம் செய்தபோது, இறுதி சடங்கை மனுதாரர் ஜெ.தீபக் தான் செய்தார்.

காரணம் என்ன?

அப்படிப்பட்டவர் (ஜெ.தீபக்), ஜெயலலிதாவின் வாரிசு என்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது, அதை தாசில்தார் வழங்க மறுத்து கோர்ட்டை அணுகும்படி 2017-ம் ஆண்டு கூறியுள்ளார், அதற்கு அவர் கூறிய காரணம் என்வென்றால், ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தீபக் வசம் இல்லை. அதை அவர் தாக்கல் செய்யவில்லை என்பதுதான். இதனால் தேவையில்லாமல், அவர் கோர்ட்டுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர், வேதா நிலையத்தின் நிர்வாக அதிகாரம் வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தனி நீதிபதி தள்ளுபடி செய்தாலும், டிவிசன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

யார் பிரச்சினை?

கேசவ் பிரசாத் சிங் வழக்கின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மேற்கோள் காட்டி, பிரச்சினைக்குரிய நிலமாக இருந்தாலும், அதை பொது பயன்பாட்டுக்காக கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று அட்வகேட் ஜெனரல் வாதம் செய்தார். ஆனால், இந்த வழக்கில் யார் பிரச்சினை செய்வது? பிரச்சினை எங்கிருந்து புறப்பட்டது? என்ற கேள்விகள் எழுகிறது.

அப்போதைய அரசும், அ.தி.மு.க, கட்சி நிர்வாகிகளையும் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவின் வீட்டின் மீது உரிமை கோரி முன் வரவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல பொது பயன்பாட்டுக்கு ஒரு சொத்தை அரசு கையகப்படுத்தினால், சட்ட விதிகளின்படி 60 நாட்களுக்கு முன்பு உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, அவரது முன்னிலையில் தான் கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தலைவியின் வீடு

ஆனால், ஜெயலலிதாவின் வீட்டிற்கு தீபாவும், தீபக்கும் உரிமையாளர்கள் கிடையாது. வேதா நிலையம் யாருடைய சொத்தும் இல்லை. அதற்கு வாரிசு இல்லை என்பது போலத்தான் அரசு நடவடிக்கை எடுத்து செயல்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சி தங்களது தலைவரை கவுரவிக்க நடவடிக்கை எடுப்பது எல்லாம் புரிந்து கொள்ளக்கூடியது தான். ஆனால், இந்த வழக்கில், தலைவியின் வீட்டில் உரிமையையே வேறுபடுத்தி காட்டி விட்டனர்.

வேதா நிலையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய இந்த ஐகோர்ட்டு, நிகழ்ச்சி முடிந்த பின்னர் வீட்டின் சாவியை சென்னை கலெக்டர் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

எதற்கு மற்றொரு நினைவகம்

ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பல கோடி ரூபாய் செலவில் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, அங்கிருந்து சில மைல் தூரத்தில் உள்ள போயஸ் கார்டனில் எதற்கு மற்றொரு நினைவகம் அமைக்க வேண்டும்? இதனால் மக்களின் வரிப் பணம் தான் வீணாகுகிறது. அப்படி என்ன ஜெயலலிதாவின் உத்வேக செய்தியை மெரினா கடற்கரையில் உள்ள நினைவகம் சொல்லாமல், வேதா நிலையம் மட்டும் சொல்கிறது?

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது பல நல திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அவர் ஆட்சியில் இருந்தபோது, அவரது தனிப்பட்ட பண்புகள் குறித்து ஆராய இந்த கோர்ட்டு விரும்பவில்லை.

மக்கள் நம்பிக்கை

அவர் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கட்டும், அதற்காக 2-வதாக ஒரு நினைவகம் எதற்காக உருவாக்கப்படுகிறது? அரசாங்கம் இதுபோல பல கோடி ரூபாய் செலவு செய்ய முற்படும்போது, இந்த ஐகோர்ட்டு ஒன்றும் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

அரசாங்கத்தின் மீது பொது மக்கள் வைக்கும் நம்பிக்கை என்பது, நாட்டின் வளங்களை பாதுகாப்பது மட்டுமல்ல, பொதுமக்களின் வரிப்பணத்தையும் பாதுகாப்பது தான். எனவே, பல கோடி இழப்பீடு கொடுத்து வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவதில் எந்த ஒரு பொது பயன்பாடும் இருப்பதாக தெரியவில்லை,

உத்தரவுகள் ரத்து

எகிப்தை ஆண்ட ஆட்சியாளர்கள் பிரமிடுகளை அமைத்தனர். முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினார். ஆனால் தற்போது எகிப்து அந்த ஆட்சியாளர்களிடமோ, இந்தியா முகலாய பேரரசர்களிடமோ இல்லை. இந்தியா, மக்களுக்கு சொந்தமானது.

எனவே, இந்த வழக்குகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்தியும், இழப்பீடு நிர்ணயித்தும், அரசுைடமையாக்கியும் தமிழக அரசு (கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை) பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை ரத்து செய்கிறேன். இந்த சொத்துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து, அந்த தொகை மாவட்ட கோர்ட்டில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த தொகை அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஒப்படைக்க வேண்டும்

இந்த உத்தரவு கிடைத்த நாளில் இருந்து 3 வாரங்களுக்குள் வேதா நிலையத்தின் சாவியை மனுதாரர்களிடம், சென்னை கலெக்டர் ஒப்படைக்க வேண்டும். அதேபோல, ஜெயலலிதா பாக்கி வைத்துள்ள வருமான வரித் தொகையை சட்டப்படி வசூலிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story