ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் - தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு


ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் - தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 2:01 PM GMT (Updated: 25 Nov 2021 2:01 PM GMT)

வருமான வரித்துறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.

சென்னை,

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் துணை முதல்-அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

2015 - 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 - 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82.12 கோடி ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசில் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்தததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமானவரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி  வைத்துள்ளனர்.

Next Story