அதிநவீன 4-வது நீர்மூழ்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். வேலா நாட்டுக்கு அர்ப்பணிப்பு


அதிநவீன 4-வது நீர்மூழ்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். வேலா நாட்டுக்கு அர்ப்பணிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 11:22 PM GMT (Updated: 25 Nov 2021 11:22 PM GMT)

இந்திய கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் அதிநவீன 4-வது நீர்மூழ்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். வேலா நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மும்பை, 

இந்திய கடற்படைக்கு 6 ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் தயாரிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டிலேயே இந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்படுகிறது.

மும்பையில் உள்ள மாஜ்காவ் டாக்யார்ட் நிறுவனம் இந்த நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமான பணியை மேற்கொண்டுள்ளது. இதுவரை கல்வாரி, காந்தேரி, கராஞ்ச் ஆகிய நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 4-வது நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வேலா தயாரிக்கப்பட்டு, அது பல்வேறு கட்ட சோதனைகளையும் மேற்கொண்டது. சோதனைகளை வெற்றிகரமாக முடித்த வேலா நேற்று கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்திய கடற்படை தளபதி கரம்பீர் சிங், இந்த நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கடலுக்கு அடியில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கு மற்றும் எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பலை தாக்க கூடிய ஏவுகணைகளை, சுமந்து செல்லும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டது இந்த நீர்மூழ்கி கப்பல். இதில் நவீன தொழில்நுட்பத்துடன் சோனார் மற்றும் சென்சார்கள் உள்ளன. மேலும் நீர்மூழ்கி கப்பலில் பெர்மாசின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிரிகளின் கவனத்தை திசை திருப்பி துல்லியமாக தாக்கும் திறன்கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல் மேற்கு மண்டல கடற்படையில் சேவை ஆற்ற உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் மும்பையில் நடந்த விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்தநிலையில் நேற்று ஐ.என்.எஸ். வேலா கடற்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திய கடற்படையின் பலம் அதிகரித்து உள்ளது.


Next Story