டெல்லியில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி; 14 எதிர்கட்சிகள் புறக்கணிப்பு
டெல்லியில் இன்று நடைபெறும் அரசியலமைப்பு தின நிகழ்ச்சியை 14 எதிர்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
புதுடெல்லி,
75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட உள்ளது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
மேலும் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவைத்தலைவர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து ஜனாதிபதி உரைக்குப், பின் அரசியல் சாசனத்தின் முன்னுரையை அவருடன் நேரலையில் படிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் ‘அரசியலமைப்பு ஜனநாயகம்’ குறித்த இணையவழி வினாடிவினாவை ஜனாதிபதி தொடங்கி வைப்பார். மேலும் அரசியலமைப்பின் முன்னுரையை 23 மொழிகளில் (22 அதிகாரப்பூர்வ மற்றும் ஆங்கிலம்) வாசிப்பது தொடர்பான இணைய போர்டல் சேவை இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் அரசியலமப்பு தின நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 14 கட்சிகள் அறிவித்துள்ளன. ஏற்கனவே நேற்று காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் 14 எதிர்கட்சிகளும் அரசியலமப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story