கேரளாவில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


கேரளாவில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 27 Nov 2021 8:44 AM GMT (Updated: 27 Nov 2021 8:44 AM GMT)

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

அதே சமயம் அண்டை மாநிலமான கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று விட்டு, விட்டு மழை பெய்தது. பம்பை நதி உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பெரும்பாலான அணைகளும் நிரம்பி உள்ளன.

இந்த நிலையில் கேரளாவில் இன்று திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம் உள்பட 12 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த 12 மாவட்டங்களுக்கும் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நாளை காசர்கோடு தவிர மாநிலத்தில் உள்ள பிற 13 மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் வருகிற 2-ந்தேதி முதல் மழை கேரளாவில் மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து மாவட்ட நிர்வாகங்கள், வருவாய்த்துறை மற்றும் மீட்புத்துறையினர் 24 மணி நேரமும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story