டெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்று மாசு - பொதுமக்கள் அவதி


டெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்று மாசு - பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 28 Nov 2021 6:53 AM GMT (Updated: 28 Nov 2021 6:53 AM GMT)

டெல்லியின் ஒரு சில பகுதிகளில் இன்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து வருகிறது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில், தொடர்ந்து பல நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் எனவும், சைக்கிளை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் டெல்லியில் கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு 372 ஆக உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்பதற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். 

அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது, 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது, 401 முதல் 500 வரை இருந்தால் மிகவும் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது. 

அந்த வகையில் டெல்லியை அடுத்த குருகிராம் பகுதியில் 349 என்ற அளவிலும், நொய்டா பகுதியில் 497 என்ற அளவிலும் காற்றின் தரக்குறியீடு உள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையில் இருந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

Next Story