அந்தமான் கடற்பகுதியில்: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு


அந்தமான் கடற்பகுதியில்: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு
x
தினத்தந்தி 29 Nov 2021 12:21 AM GMT (Updated: 29 Nov 2021 12:21 AM GMT)

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் பெய்த பெருமழையால் மாநகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்கியது.

தாம்பரம், முடிச்சூர், திருநின்றவூர் போன்ற புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குமரி, தூத்துக்குடி, நெல்லை போன்ற தென்மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

‘ரெட் அலர்ட்’ வாபஸ்

வளி மண்டல சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் 12 கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுத்துறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய மிதமான மழையும் நேற்று பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் எதிர்பார்த்தப்படி மழை பெய்யவில்லை. இதனால் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை, வெயில்

சென்னையில் நேற்று அதிகாலை பொழுது மழைபொழிவுடன் தொடங்காமல் வெயிலுடன் விடிந்தது. நேரம் செல்ல, செல்ல கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்தது. பின்னர் சிறிது நேரத்தில் வானம் தெளிவாகி மழை நின்று வெயில் தலைக்காட்டியது. எழும்பூர்,புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகளில் வெயில் சுளீரென்று அடித்த போது அடையார், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை போன்ற இடங்களில் கனமழை பெய்தது. பின்னர் அந்த பகுதிகளில் வெயில் அடித்தபோது இந்த இடங்களில் மழை பெய்தது. இயற்கையை கணிக்க முடியாது என்பதை பறை சாற்றும் வகையில் வானிலை நிலவியது.

சென்னையில் நேற்று திடீரென்று மழையும், திடீரென்று வெயிலும் மாறி, மாறி அடித்து மக்களிடம் வானிலை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது போன்று இருந்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 48 மணி நேரத்தில் (நாளை) மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

‘தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்’.

தற்போது குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும். (இந்த 2 மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது).

தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பொழிவும் இருக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலை

நாளை (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலும் மழை பெய்யக்கூடும்.

1-ந் தேதி (புதன்கிழமை) அன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் இருக்கும். 2-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரி கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், அதே போன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Next Story