டெல்லி: காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசம் - பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு


டெல்லி: காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசம் - பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 29 Nov 2021 3:49 AM GMT (Updated: 29 Nov 2021 3:49 AM GMT)

காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமாக உள்ள நிலையில் டெல்லியில் ஒருவார இடைவேளைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

டெல்லி,

வாகன பெருக்கம், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதின்பேரில், கடந்த 13-ந் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவசர கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில், காற்று மாசை கருத்தில் கொண்டு டெல்லில் பள்ளி, கல்லூரிகளில் கடந்த 15-ம் தேதி முதல் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், கடந்த 15-ம் தேதி முதல் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலையில் உள்ளபோதும் தலைநகர் டெல்லியில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதால் முகக்கவகசம் அணிந்து மாணவ/மாணவிகள் வகுப்புகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். 

Next Story