அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் மோடி


அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 29 Nov 2021 5:35 AM GMT (Updated: 29 Nov 2021 7:54 AM GMT)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றம் வந்தார். அப்போது, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேசுகையில், இது நாடாளுமன்றத்தின் முக்கியமான கூட்டத்தொடர். செயல்பாடு மிக்க கூட்டத்தொடராக இது அமைய வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். ஒளிமயமான எதிர்காலத்திற்காக அவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகிறார்கள்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளோம். அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க எங்கள் அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றத்தில் நாம் விவாதிக்க வேண்டும். மேலும், நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்’ என்றார்.  



Next Story