5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு..! வானிலை மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Nov 2021 7:41 AM GMT (Updated: 29 Nov 2021 8:25 AM GMT)

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 

இன்று (29-11-2021) விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

நாளை (30-11-2021) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (01-12-2021) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்..

டிசம்பர் 2-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 3-ஆம் தேதி தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 17, சிவலோகம் (கன்னியாகுமரி) 16, களியல் (கன்னியாகுமரி) 14, சிற்றாறு (கன்னியாகுமரி) 13, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 12, புதுச்சேரி, தக்கலை (கன்னியாகுமரி), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 11, குழித்துறை (கன்னியாகுமரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வல்லம் (விழுப்புரம்), குடிதாங்கி (கடலூர்), வானமாதேவி (கடலூர்) தலா 10, திருத்தணி (திருவள்ளூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பாபநாசம் (திருநெல்வேலி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), வேப்பூர் (கடலூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), தலா 9 சென் டிமீட்டர் மழை பெய்துள்ளது.

அதேபோல், மணிமுத்தாறு (திருநெல்வேலி), காரைக்கால் (காரைக்கால்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), வாலாஜா (இராணிப்பேட்டை), பூண்டி (திருவள்ளூர்), நாகப்பட்டினம் , மணல்மேடு (மயிலாடுதுறை), காட்டுமயிலூர் (கடலூர்), கொத்தவாச்சேரி (கடலூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 8 உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), நெய்வேலி (கடலூர்) , மயிலாடுதுறை, புவனகிரி (கடலூர்), சூரலக்கோடு (கன்னியாகுமரி), சென்னை விமான நிலையம், கலவை (ராணிப்பேட்டை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), செங்கல்பட்டு, பண்ருட்டி (கடலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்

இன்று (29-11-2021) குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நாளை (30-11-2021) தெற்கு அந்தமான் கடற்பகுதியில்
புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி
உருவாக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். 

இதன்காரணமாக நாளை (30-11-2021) தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்
 
இன்று (29-11-2021)  தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Next Story