பெண் தொழில் அதிபர் புகார்: அமலாக்கத்துறை அதிகாரிகள் சி.விஜயபாஸ்கரிடம் துருவி துருவி விசாரணை


பெண் தொழில் அதிபர் புகார்: அமலாக்கத்துறை அதிகாரிகள் சி.விஜயபாஸ்கரிடம் துருவி துருவி விசாரணை
x
தினத்தந்தி 29 Nov 2021 12:26 PM GMT (Updated: 29 Nov 2021 12:26 PM GMT)

கோடிக்கணக்கில் பணம் புழங்கியதால் அவர்கள் இதுபற்றி விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ‌ஷர்மிளா. இவர் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் நகைக்கடை உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

இவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நெல்லை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் விஜயபாஸ்கரிடம் தொழில்ரீதியாக தொடர்பு இருந்து வந்தது. அவர் என்னிடம் வாங்கிய ரூ.14 கோடி பணத்தில் ரூ.3 கோடியை மட்டும் திருப்பி தந்தார். மீதி பணத்தை திருப்பி தரவில்லை. அதனை கேட்டால் அவர் மிரட்டுகிறார். எனவே எனக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இதற்கிடையே பெண் தொழில் அதிபர் ‌ஷர்மிளா கொடுத்த புகார் தொடர்பாக கேரளாவில் உள்ள அமலாக்க துறையினரும் விசாரணை மேற்கொண்டனர்.

கோடிக்கணக்கில் பணம் புழங்கியதால் அவர்கள் இதுபற்றி விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து கொச்சியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமலாக்க துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொச்சியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story