தங்க சுரங்கம் இடிந்து விபத்து; 20 பேர் மண்ணுக்குள் புதைந்தனர் - அதிர்ச்சி சம்பவம்


தங்க சுரங்கம் இடிந்து விபத்து; 20 பேர் மண்ணுக்குள் புதைந்தனர் - அதிர்ச்சி சம்பவம்
x

தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜகார்தா,

இந்தோனேசியா நாட்டின் பல்வேறு இடங்களில் தங்கச்சுரங்கள் உள்ளன. இதில் சில சுரங்கங்களில் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு கலிமந்தன் மாகாணம் பென்ங்கயங் மாவட்டம் கினண்டி கிராமத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு 20 பேர் தங்கம் வெட்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், சுரங்கத்தில் இருந்த 20 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர்.

தகவல் தொடர்பு குறைவான பகுதி என்பதால் இந்த விபத்து குறித்து அதிகாரிகளுக்கு நேற்று இரவு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் மண்ணுக்குள் புதைந்த 20 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Next Story