ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது அமெரிக்கா கைவிட்டதால் இஸ்ரேல் அதிர்ச்சி


ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது அமெரிக்கா கைவிட்டதால் இஸ்ரேல் அதிர்ச்சி
x
தினத்தந்தி 24 Dec 2016 9:00 PM GMT (Updated: 24 Dec 2016 8:16 PM GMT)

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக பகை நிலவி வருகிறது.

நியூயார்க்,

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக பகை நிலவி வருகிறது.

ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருகிறது.

இதை தடுத்து நிறுத்தக்கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மலேசியா, நியூசிலாந்து, செனகல், வெனிசுலா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தன.

அந்த தீர்மானத்தில், “கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில் குடியிருப்பு செயல்பாடுகளை இஸ்ரேல் முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பான சட்டதிட்டங்களை இஸ்ரேல் மதித்து நடக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தின்மீது நேற்று முன்தினம் ஓட்டெடுப்பு நடைபெற்றது.

இந்த ஓட்டெடுப்பில் 15 நாடுகளில் 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது. இதனால் தீர்மானம் நிறைவேறியது.

1979-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான், குடியிருப்பு கொள்கையில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற அமெரிக்கா வழிவிட்டுள்ளது.

தனது நட்பு நாடாக அறியப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற அமெரிக்கா வழிவிட்டிருப்பது ஒரு அபூர்வ நிகழ்வாகும். இந்த தீர்மானத்தை தனது மறுப்பு ஓட்டை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரிக்க வேண்டும் என டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியும், அது ஒபாமா நிர்வாகத்தால் ஏற்கப்படவில்லை.

இது இஸ்ரேலுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் வெட்ககரமானது, அதை ஏற்க முடியாது” என அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story