ஆப்கானிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலில் அமீரகத்தின் 5 மனிதநேய பணியாளர்கள் உயிரிழப்பு


ஆப்கானிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலில் அமீரகத்தின் 5 மனிதநேய பணியாளர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 11 Jan 2017 11:37 AM GMT (Updated: 11 Jan 2017 11:37 AM GMT)

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் கல்வி மற்றும் வளர்ச்சி, மனிதநேய பணிகளில் ஈடுபட்டிருந்த அமீரகத்தினை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர் என ஐக்கிய அரபு அமீரகம் இன்று தெரிவித்துள்ளது.

துபாய்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தெற்கே அமைந்த கந்தஹார் நகரில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர்.  18 பேர் காயமடைந்தனர்.  ஐக்கிய அமீரகத்தின் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான தூதரும் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

காபூல் நகரில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்த தலீபான் தீவிரவாத அமைப்பு இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.  அவர்கள், கந்தஹார் தாக்குதல் உள்ளூர் குழுக்களுக்கு இடையேயான பகையினால் ஏற்பட்டிருக்க கூடும் என இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 5 பேர் அமீரகத்தினை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இது பற்றி அமீரகத்தில் இருந்து வெளியாகும் செய்தி இதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், மனிதநேய, கல்வி மற்றும் வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்த அமீரகத்தினை சேர்ந்த 5 பேர் செவ்வாய் கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு அதிபர் ஷேக் கலீபா பின் ஜயத் அல்-நஹியான் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அனைத்து அமைச்சகங்கள், அரசு துறைகள் மற்றும் அமைப்புகள் ஆகியவை கொல்லப்பட்டவர்களுக்கு கவுரவமளிக்கும் வகையில் 3 நாட்களுக்கு கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story