அமெரிக்க தேர்தலில் ரஷ்யா இணைய தாக்குதல் நடத்தியதாக டொனால்டு டிரம்ப் ஒப்புதல்


அமெரிக்க தேர்தலில் ரஷ்யா  இணைய தாக்குதல் நடத்தியதாக டொனால்டு டிரம்ப் ஒப்புதல்
x
தினத்தந்தி 12 Jan 2017 7:29 AM GMT (Updated: 12 Jan 2017 7:29 AM GMT)

அமெரிக்க அதிபர் தேர்தலில் இணைய தாக்குதலுக்குப் பின்னணியில் ரஷ்யா இருந்திருக்கலாம் என டிரம்ப் முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் விரைவில் பதவி ஏற்க உள்ளார். இவரது தேர்தல் வெற்றிக்கு ரஷியா உதவியதாகவும், ஓட்டு எந்திரங்களை ஹேக்கிங் முறையில் ரஷியா தன்வசப்படுத்தி அவற்றில் தில்லுமுல்லு செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் டிரம்ப் தொடர்பான ரகசிய தகவல்களை ரஷியா வைத்திருப்பதாகவும் அதை வைத்து டிரம்பை ரஷியா மிரட்டி வருவதாகவும் அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இதை டிரம்ப் மறுத்தார்.

இந்த நிலையில் முதன் முதலாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலுக்குப் பின்னணியில் ரஷ்யா இருந்திருக்கலாம் என டிரம்ப் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நமது நாட்டின் மீது ரஷ்ய மிகுந்த மரியாதை வைத்து உள்ளது. தற்போது அதனை வழி நடத்தப்போகிறேன் என கூறினார்.

என்னை பற்றி தவறாக வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் செய்திகள் முற்றிலும் போலியானது. எனக்கு ரஷ்யாவுடன் கடனோ, நிலுவை தொகையோ என எந்த வித தொடர்பும் இல்லை. ரஷ்ய அதிபர் புதினுக்கு என் மீது நல்ல அபிமானம் ஏற்பட்டால் அது எனது பெரிய சொத்தாக கருதுவேன்.

நான் செலுத்திய வரி விபரங்களை தற்போது வெளியிடப்போவதில்லை. அது தற்போது தணிக்கையில் உள்ளது. எனது தொழில்களை எனது இரண்டு மகன்களும் கவனித்து வருகின்றனர். அதுகுறித்து எந்த கருத்துக்களும் அவர்கள் என்னிடம் பகிரப்போவதில்லை. நான் எனது தொழிலில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிவிட்டேன். என கூறினார்.

Next Story