எல்லைச்சுவர் குறித்து டிரம்பும் மெக்ஸிகோ அதிபரும் பொது அறிக்கைகள் விட மாட்டார்கள் என தகவல்


எல்லைச்சுவர் குறித்து டிரம்பும் மெக்ஸிகோ அதிபரும் பொது அறிக்கைகள் விட மாட்டார்கள் என தகவல்
x

எல்லைச்சுவர் கட்டுவது குறித்து மெக்ஸிகோ அதிபரும் அமெரிக்க அதிபர் டிரம்பும் பொது அறிக்கைகள் விடமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ சிட்டி,

மெக்சிகோவில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் இரு நாட்டு எல்லையில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்தார்.

அதன்படி, இப்போது தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவியை ஏற்ற நிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதுமட்டுமின்றி இந்த தடுப்புச்சுவர் கட்டுவதற்கான பணத்தை மெக்சிகோ தர வேண்டும் என்று கூறினார்.
ஆனால் அதை மெக்சிகோ நிராகரித்து விட்டது. இது தொடர்பாக மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ கருத்து தெரிவிக்கையில், “சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை. நான் இதை பல முறை கூறி விட்டேன். இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது” என குறிப்பிட்டார்.

பணம் தரவில்லை என்றால் மெக்ஸிகோவிற்கு வரவேண்டாம் என்று டிரம்ப் பதிலடி கொடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே பதட்டம் அதிகரித்தது. இந்த நிலையில், மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவது தொடர்பாக இரு தலைவர்களும்  பொது வெளியில் கருத்து தெரிவிக்கமாட்டார்கள் என்று மெக்ஸிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேறுபாடுகளை பேச்சுவார்த்தையின் மூலம் களையவும் முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அந்த அறிக்கையில் டிரம்பும் பெனோ நீட்டோவும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொலைபேசியில் உரையாடியதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையில் இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story