மெக்சிகோ எல்லையில் அமெரிக்கா தடுப்புச்சுவர் எழுப்ப ஈரான் எதிர்ப்பு


மெக்சிகோ எல்லையில் அமெரிக்கா தடுப்புச்சுவர் எழுப்ப ஈரான் எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Jan 2017 10:00 PM GMT (Updated: 28 Jan 2017 8:06 PM GMT)

மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டெக்ரான், 

மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறுவோரை தடுக்க, அந்த நாட்டின் எல்லையில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு பிரமாண்ட தடுப்புச்சுவர் எழுப்ப அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதற்கான பணத்தை தர முடியாது என மெக்சிகோ கூறி உள்ள நிலையில், அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது 20 சதவீத கூடுதல் வரி விதிக்க டிரம்ப் முடிவு எடுத்திருப்பது, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி டெக்ரானில் அவர் கூறுகையில், “பல ஆண்டுகளுக்கு முன்பு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதை அவர்கள் (டிரம்ப்) மறந்து போனார்கள் போலும். நாடுகளுக்கு இடையே சுவர்கள் இருந்தால், அவை அகற்றப்பட வேண்டும். நாடுகளுக்கு இடையே தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நேரம் இது அல்ல” என குறிப்பிட்டார்.

ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்திருப்பது பற்றி ஹசன் ரவ்ஹானி நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், “உலக நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கை செய்து கொண்ட காலம் தொடங்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் கதவுகளை திறந்து வைத்துள்ளது” என குறிப்பிட்டார். 

Next Story