டெஸ்ட் டியூப் குழந்தைகளை பெற்றுகொள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய கோர்ட் அனுமதி


டெஸ்ட் டியூப் குழந்தைகளை பெற்றுகொள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய கோர்ட் அனுமதி
x
தினத்தந்தி 22 Feb 2017 12:14 PM GMT (Updated: 22 Feb 2017 12:14 PM GMT)

பாகிஸ்தான் நாட்டில் டெஸ்ட் டியூப் எனப்படும் செயற்கை முறையில் குழந்தை பெற்றுகொள்ள இஸ்லாமிய கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்லாமாபாத்:

கருத்தரிக்க வாய்ப்பில்லாத தம்பதியரில் கணவரது விந்தணுக்களையும், மனைவியின் கருமுட்டையையும் சோதனை குழாய் மூலம் இணைத்து, கருத்தரிக்க வைத்து, பின்னர், ஓரளவுக்கு வளர்ச்சிபெற்ற கருவினை அந்தப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, குழந்தைப்பேற்றை சாத்தியமாக்கும் டெஸ்ட் டியூப் எனப்படும் சோதனை குழாய் குழந்தை மகப்பேறு முறை உலகின் வளர்ந்த நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகமாகி விட்டது.

உலகின் முதல் சோதனை குழாய் குழந்தை 25-7-1978 அன்று பிறந்தது. டாக்டர் இந்திரா இந்துஜா என்பவரின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதல் சோதனை குழாய் குழந்தை 4-1-1988 அன்று பிறந்தது. ஆனால், இஸ்லாமிய மத கோட்பாடுகளை சட்டமாக பின்பற்றும் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் இதுபோன்ற சோதனை குழாய் குழந்தைகளை பெற்றுகொள்ளும் செயல் மதத்திற்கு எத்ராகவும்  சட்டவிரோதமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நீண்டகாலமாக விரிவான ஆலோசனையில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம், டெஸ்ட் டியூப் எனப்படும் சோதனை குழாய் குழந்தை பெற்றுகொள்வது சட்டமீறல் மற்றும் சட்டவிரோதம் ஆகாது என தற்போது தீர்ப்பளித்துள்ளது.

தந்தையின் விந்தணுவையும், தாயின் கருமுட்டையையும் ஒன்றுசேர வைத்து, கருத்தரிக்கச் செய்து, முறையான மருத்துவர்களின் மூலம் அதை மீண்டும் தாயின் கருப்பைக்குள் செலுத்துவது சட்டத்துக்கு உட்பட்டதுதான். குரான் மற்றும் இஸ்லாமிய நன்முறைகளுக்கு (சுன்னா) எதிரானது அல்ல. அதே வேளையில், வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுகொள்வது உள்ளிட்ட வேறு வகையில் இதுபோன்ற குழந்தைகளை உருவாக்குவது சட்டவிரோதம் ஆகும் என்று  பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம் தனது 22 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக, 1872-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட பாகிஸ்தான் தண்டனை சட்டத்தில் வரும் 15-8-2017-க்குள் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் பாகிஸ்தான் அரசை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

Next Story