ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதற்காக சிரியா கடும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை


ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதற்காக சிரியா கடும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 April 2017 6:25 AM GMT (Updated: 12 April 2017 6:24 AM GMT)

ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதற்காக சிரியா கடும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன்,

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தின்கீழ் உள்ள இத்லிப் மாகாணத்தில், கான் ஷேக்குன் நகரில் கடந்த 4–ந் தேதி போர் விமானங்கள் வி‌ஷ வாயு தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தைகள் உள்பட 80–க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உலகையே ஒரு சேர உலுக்கியுள்ள இந்த தாக்குதலை சிரியா அதிபர் பஷார் ஆல் ஆசாத் படைகள்தான் நடத்தியதாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் உறுதி செய்தன. மேற்கு ஹாம்ஸ் மாகாணத்தில் உள்ள ‌ஷராத் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விமானங்கள்தான் ஈவிரக்கமின்றி வி‌ஷ வாயு தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கருதுகிறது.சிரியா படைகள் நடத்திய வி‌ஷ வாயு தாக்குதலுக்கு சரியான பதிலடி தருகிற விதத்தில், அமெரிக்கா யாரும் எதிர்பாராத வகையில், ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்த நிலையிலும், ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  

இந்த நிலையில்,  இந்த தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெண்டகன் தலைமை பாதுகாப்பு அதிகாரி மாட்டீஸ் சிரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அதில், சிரியா மீண்டும் ரசாயன தாக்குதலை நடத்தினால் அந்நாடு  மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்” என்றார். மேலும், சிரியா திட்டமிட்டு இத்தகைய தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story