ஆப்கானிஸ்தானில் அணு அல்லாத மிகப்பெரிய குண்டை வீசிய அமெரிக்க ராணுவத்துக்கு டிரம்ப் பாராட்டு


ஆப்கானிஸ்தானில் அணு அல்லாத மிகப்பெரிய குண்டை வீசிய அமெரிக்க ராணுவத்துக்கு டிரம்ப் பாராட்டு
x
தினத்தந்தி 14 April 2017 4:28 AM GMT (Updated: 14 April 2017 4:27 AM GMT)

ஆப்கானிஸ்தானில் அணு அல்லாத மிகப்பெரிய குண்டை வீசிய அமெரிக்க ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இடத்தை குறிவைத்து அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு முகமை பென்டகன் உறுதி செய்துள்ளது. ஆப்கன் பகுதியில்  பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கத்துடன், பயங்கர சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை, நேற்று அமெரிக்கப்படையினர் வீசியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பகுதியில்  கணிசமான மாவட்டங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க, புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிக்க அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை பயன்படுத்த ராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி நேற்று முதல் முறையாக, அணு அல்லாத மிகப்பெரிய குண்டை பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை குறி வைத்து விமானம் மூலம் வீசப்பட்டது. ஆப்கன் நேரப்படி, நேற்றிரவு 7 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்க ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கையை டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார். அமெரிக்க ராணுவத்தை எண்ணி பெருமை அடைவதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். அமெரிக்க செனட் உறுப்பினர்களும் டிரம்பின் நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு இது ஒரு தெளிவான தகவலை அனுப்பியிருக்கும் என்று செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story