அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் மர்மச்சாவு


அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 20 May 2017 9:30 PM GMT (Updated: 20 May 2017 5:38 PM GMT)

அமெரிக்காவில் உட்டா மாகாணத்தின் தலைநகரான சால்ட் லேக் சிட்டியை சேர்ந்தவர், ஆலாப் நரசிப்புரா (வயது 20). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

நியூயார்க்,

அமெரிக்காவில் உட்டா மாகாணத்தின் தலைநகரான சால்ட் லேக் சிட்டியை சேர்ந்தவர், ஆலாப் நரசிப்புரா (வயது 20). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். நியூயார்க் மாகாணம், இத்தாக்கா நகரில் உள்ள கார்னல் பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் மின்பொறியியல் படித்து வந்தார். இந்த ஆண்டு பட்டப்படிப்பை முடித்து விட்டு, அதே கல்லூரியில் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு படிக்க எண்ணி இருந்தார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் கடந்த புதன்கிழமை திடீரென காணாமல் போய் விட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை அந்தப்பகுதியில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இத்தாக்கா அருவி அருகே பால் கிரீக் என்ற இடத்தில் அவர் பிணமாகக் கிடந்தது நேற்று முன்தினம் தெரிய வந்தது. அது ஆலாப் நரசிப்புராவின் உடல்தான் என்பதை கார்னல் பல்கலைக்கழக போலீஸ் உறுதி செய்தது. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

ஆலாப் நரசிப்புராவின் மர்மச்சாவு குறித்து கார்னல் பல்கலைக்கழக மாணவர் சங்க துணைத்தலைவர் ரேயான் லம்பார்டி கூறுகையில், “மிகுந்த ஆர்வம் உள்ள மாணவராக அவர் திகழ்ந்தார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினார். அவரது திடீர் மரணம் மிகுந்த வேதனையை தந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

ஆலாப் நரசிப்புராவின் மர்ம மரணம் பற்றி கார்னல் பல்கலைக்கழக போலீசார், நியூயார்க் மாகாண போலீசாருடனும், இத்தாக்கா நகர போலீசாருடனும் இணைந்து புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story