ஈரான் இல்லாமல் பிரதேசத்தில் நிலைத்ததன்மையிருக்காது - ரூஹானி


ஈரான் இல்லாமல் பிரதேசத்தில் நிலைத்ததன்மையிருக்காது - ரூஹானி
x
தினத்தந்தி 22 May 2017 10:13 PM GMT (Updated: 22 May 2017 10:13 PM GMT)

ஈரானின் பங்களிப்பு இல்லாமல் மத்திய கிழக்கில் நிலைத்ததன்மை இருக்காது என்று ஈரானிய அதிபர் ரூஹானி கூறினார்.

துபாய்

அமெரிக்க அதிபரின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார். ஞாயிறு அன்று சவூதி வந்த அமெரிக்க அதிபர் ஈரான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதால் அதனை எதிர்க்க இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட வேண்டுமென்றார். ரூஹானி சவூதி மாநாடு வெறும் சடங்கு; விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத அரசியல் கூட்டம் என்றார். அமெரிக்கர்களுக்கு மத்திய கிழக்கைப் பற்றிய அறிவு கிடையாது என்றும் கூறினார். அவர்கள் பலவிதமாக முயற்சிகளை செய்து அத்தனை முயற்சிகளிலும் தோற்றுவிட்டது. நாம் அமெரிக்க அரசு தனது கொள்கைகளில் தொடர்ச்சியை (ஈரானுடனான உறவில்) கொண்டிருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். 

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடியவர்கள் யார்? தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது யார்? நிதியுதவி செய்தவர்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடியதாக உரிமைக் கோர முடியாது என்று மறைமுகமாக சவூதி அரேபியாவை சாடினார் ரூஹானி.

சிரியா, ஏமன், ஈராக் மற்றும் லெபனானில் சவூதியும், ஈரானும் மறைமுகமாக தங்களது ஆதரவாளர்களுக்கு உதவி அளிப்பதன் மூலம் மோதி வருகின்றன. ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து, ஈரான், சிரியா (அஸாத்), ஹிஸ்புல்லா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளே போராடியதாக ஈரான் கூறுகிறது.

”ஒரு நாடு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதால் மட்டும் வலுப்பெற்றதாக ஆகிவிடாது. இராணுவ பலம் என்பது நாட்டின் பலத்தில் ஒரு பகுதி மட்டுமே; இதை நாங்கள் அறிவோம். தேசிய பலமே வலிமையின் அடிப்படை. அதை தேர்தல் மூலமே பெற முடியும்” என்றார் ரூஹானி. சவூதியில் மன்னராட்சி நடைபெறவதையே இப்படி சுட்டிக்காட்டுகிறார். ”சவூதி தலைவர்கள் மக்கள் வாக்கு அளித்து நாட்டின் தலைவிதியை தீர்மானிக்க அனுமதிக்கட்டும். இது அவர்களை பலப்படுத்தும்” என்றார்.

ஈரான் தனது கதவுகளை அண்டை நாடுகளுக்கு திறந்து வைக்கும்; அதன் மூலமே முதலீடுகள் வரும். முதலீடுகள் மூலம் வளர்ச்சி வரும் என்றார் ரூஹானி. எனினும் அமெரிக்காவின் தடைகளுக்கு பயந்து இதர நாடுகள் ஈரானில் சிறிதளவு முதலீடுகளையே செய்துள்ளனர். அமெரிக்க கடந்த வாரம் புதிய தடைகளை விதித்தது. ஈரானின் ஏவுகணை திட்டத்தை எதிர்த்தே தடை விதிக்கப்பட்டது. “எங்களது ஏவுகணைகள் அமைதிக்கானவை. எங்களுக்கு வலு சேர்க்கவே. நாங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏவுகணை சோதனை நடத்துவோம். அமெரிக்க அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்க மாட்டோம்” என்றார் ரூஹானி.

“எங்கள் ஏவுகணை திட்டத்தை முடக்கும் அமெரிக்காவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” என்று திட்டவட்டமாக ரூஹானி கூறினார்.


Next Story