கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் அத்துமீறினால் கைதுகள் தொடரும்-இலங்கை அமைச்சர்


கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் அத்துமீறினால் கைதுகள் தொடரும்-இலங்கை அமைச்சர்
x
தினத்தந்தி 25 May 2017 8:35 AM GMT (Updated: 25 May 2017 10:23 AM GMT)

இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் அத்துமீறினால் கைது நடவடிக்கைகள் மற்றும் விசைப்படகுகள் பறிமுதல் தொடரும் என இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமர வீர தெரிவித்துள்ளார்.

 கொழும்பு

இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமர வீர இன்று கொழும்பில் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் குறித்து கடந்த காலத்தில் இந்திய மீனவர் தரப்புடன் இலங்கை உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.அதைத்தொடர்ந்து இரு நாடுகளின் பிரதிநிதிகளும் எடுத்த முடிவின் அடிப்படையில் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

குறிப்பாக இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இலங்கையின் வடபகுதி மீனவர்களை பெரிதும் பாதித்து அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னிடம் முறையிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்தே இந்திய தரப்புடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அந்த வகையில் எங்களது கோரிக்கைகளை இந்திய தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக  எக்காரணத்தை கொண்டும் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிகளை மேற்கொள்ளக் கூடாது.  அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என நாங்கள் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளோம். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அந்த வகையில் அண்மைக் காலமாக இந்திய மீனவர்களின் அத்துமீறி மீன்பிடி சம்பவம் ஐம்பது சதவீதமாக குறைந்துள்ளது.

இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எங்களது மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டே செயல்பட்டு வருகிறோம். மேலும் இலங்கையின் வசம் உள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று 42 படகுகளை விரைவில் விடுவிக்க அரசு  தீர்மானித்துள்ளது. இந்திய தூதரகத்துக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளோம்.

எனினும் எங்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டே படகுகள் விடுவிக்கப்படும். எங்களது நிபந்தனைகளை மறுக்கும் பட்சத்தில் படகுகளை விடுவிக்க மாட்டோம். அதேபோல் படகுகளை நாங்கள் மீண்டும் வழங்குகின்றோம் என்பதற்காக இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்ற மாட்டோம் என்று அர்த்தமில்லை. இப்போது படகுகளை கொடுத்தாலும் எங்கள் எல்லைக்குள் அத்துமீறும் படகுகளை நாம் தொடர்ச்சியாக கைப்பற்றுவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார்.

Next Story