இங்கிலாந்து குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட சல்மான் அபேதியின் புகைப்படம் வெளியீடு


இங்கிலாந்து குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட சல்மான் அபேதியின் புகைப்படம் வெளியீடு
x
தினத்தந்தி 28 May 2017 4:33 AM GMT (Updated: 28 May 2017 4:47 AM GMT)

இங்கிலாந்து குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட சல்மான் அபேதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து நாட்டில், மான்செஸ்டர் நகரில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 22–ந் தேதி இரவு அமெரிக்க பாடகி அரியானா கிராண்டேயின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்து, அவர் மேடையில் இருந்து இறங்கி வெளியேறிய நிலையில், அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில், குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.

இந்த குண்டுவெடிப்பை நடத்தியவர், சல்மான் அபேதி (வயது 22) என தெரியவந்துள்ளது. விசாரணை நடத்தி வரும் பிரிட்டன் போலீஸ் சல்மான் அபேதி சகோதரன் இஸ்மாயில் உள்பட  11 கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கிடையில், தாக்குதல் நடத்திய சல்மான் அபேதியின் புகைப்படத்தை விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 

சல்மான் அபேதி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள போலீசார் திங்கள் கிழமை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அபேதியின் நடமாட்டம் குறித்து தகவல்கள்  தெரிந்தால் தெரிவிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். சிசிடிவி கேமிராவில்  இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு  முன்பு மான்செஸ்டர் நகரில் உள்ள சிட்டி செண்டர் பிளாட்டிற்கு சென்றுவிட்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரிட்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சல்மான் அபேதியின் தந்தை மற்றும் சகோதரன் லிபியாவில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

Next Story