ஈராக்கில் அடுத்தடுத்து கார் குண்டுவெடிப்பு 27 பேர் உடல் சிதறி சாவு


ஈராக்கில் அடுத்தடுத்து கார் குண்டுவெடிப்பு 27 பேர் உடல் சிதறி சாவு
x
தினத்தந்தி 30 May 2017 11:30 PM GMT (Updated: 30 May 2017 7:25 PM GMT)

ஈராக்கில் ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து நடந்த கார் குண்டு வெடிப்புகளில் சிக்கி 27 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பாக்தாத்,

ஈராக்கில் உலகின் பிற பகுதிகளைப் போன்று ரம்ஜான் நோன்பு தொடங்கி உள்ளது. இந்த நிலையில், தலைநகர் பாக்தாத்தின் காரடா பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ஒரு ஐஸ் கிரீம் பார்லரில் வாடிக்கையாளர்கள் நேற்று நிரம்பி வழிந்தனர்.

அப்போது அந்த ஐஸ் கிரீம் பார்லர் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய கார் ஒன்றை ஓட்டி வந்து, தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் பயங்கரமாக மோதினார். சற்றும் எதிர்பாராத வகையில் இந்த தாக்குதல் நடந்தது.

15 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

இதில் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்தப் பகுதியே குலுங்கியது. கரும்புகை மண்டலம் உருவானது. அங்கு இருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாலாபக்கமும் சிதறி ஓடினர். எங்கு பார்த்தாலும் பெரும் பதற்றம் காணப்பட்டது.

இந்த கார் குண்டுவெடிப்பு பற்றிய தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சுற்றி வளைத்தனர்.

இதற்கிடையே மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் 15 பேர் உடல் சிதறி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

இந்த தாக்குதலுக்கு உலகையே அச்சுறுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.

இது தொடர்பாக அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிற ‘அமாக்’ செய்தி இணையதளத்தில், ‘‘ஷியா பிரிவினர் கூடி இருந்த இடத்தில் தற்கொலைப்படை வீரர் குறிவைத்து தாக்குதல் நடத்தினார்’’ என கூறப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஷியா பிரிவினரை ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பிடிக்காது; எனவே அவர்களை குறிவைத்து தாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

12 பேர் சாவு

இந்த கார் குண்டுவெடிப்பு நடந்த அடுத்த சில மணி நேரத்தில் கார்க் மாவட்டத்தில் அரசு அலுவலகம் ஒன்றின் அருகே கார் குண்டுவெடிப்பினை பயங்கரவாதிகள் நடத்தினார்கள்.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த கார் குண்டுவெடிப்புகளில் 27 பேர் உடல் சிதறி உயிரிழந்திருப்பது ஈராக் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story