எரியும் பனிக்கட்டியில் இருந்து வெற்றிகரமுடன் இயற்கை வாயுவை தயாரித்த சீனா


எரியும் பனிக்கட்டியில் இருந்து வெற்றிகரமுடன் இயற்கை வாயுவை தயாரித்த சீனா
x
தினத்தந்தி 29 July 2017 12:16 PM GMT (Updated: 29 July 2017 12:16 PM GMT)

தென் சீன கடல் பகுதியில் எரியும் பனிக்கட்டியில் இருந்து இயற்கை வாயுவை வெற்றிகரமுடன் தயாரித்து சீனா சாதனை படைத்துள்ளது.

ஷாங்காய்,

தென் சீன கடல் பகுதியை சீனா தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது. 

இந்நிலையில், தென் சீன கடலின் அடிப்பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் எனப்படும் வேதி பொருள் கண்டறியப்பட்டு உள்ளது. இது எரியும் பனிக்கட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

இதில் இருந்து இயற்கை எரிவாயுவை வெற்றிகரமுடன் தயாரித்துள்ளோம் என கடந்த மே மாதம் ஜப்பான் அறிவித்தது. இந்தியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஹைட்ரேட்டுகளை ஒரு மாற்று ஆற்றல்வளம் கொண்ட வேதி பொருளாக கருதுகின்றன.

இந்த நிலையில், ஜுஹாய் என்ற தென்கிழக்கு சீன நகரின் கடலோர பகுதியில் ஆழ்துளை மேடை அமைக்கப்பட்டது. அங்கு 60 நாட்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு 3 லட்சத்து 9 ஆயிரம் கன மீட்டர்கள் அளவிற்கு இயற்கை வாயு தயாரிக்கப்பட்டு உள்ளது.

வாயு நிலையிலான ஹைட்ரேட்டுகளில் இருந்து பெருமளவில் இயற்கை வாயு தயாரிக்கப்பட்டு உள்ள இந்த சாதனை பற்றி சீனாவின் நில மற்றும் இயற்கை வள அமைச்சகம் தெரிவித்துள்ள செய்தியில், 20 வருடங்களாக தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியில், தத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம், இயந்திரவியல் மற்றும் சாதனங்கள் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் சீனா சாதனை படைத்துள்ளதுடன் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கண்டுபிடிப்பினையும் உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

தென் சீன கடலின் வட பகுதியில் இந்த வருட தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வுகள் மற்றும் ஆழ்துளை திட்டங்களின் அடிப்படையில் 100 பில்லியன் கன மீட்டர்கள் அளவிலான 2 வாயு ஹைட்ரேட் படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது.

2016-2020 ஐந்து ஆண்டு திட்டத்தில் இயற்கை வாயு ஹைட்ரேட்டுகளை திறம்பட உருவாக்குவதற்கான உறுதியினை சீன அரசு அளித்துள்ளது.


Next Story