டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை, ஆதரவு அளிப்போம் பாகிஸ்தானுக்கு ரஷியா, சீனா உறுதியளிப்பு


டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை, ஆதரவு அளிப்போம் பாகிஸ்தானுக்கு ரஷியா, சீனா உறுதியளிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2017 1:34 PM GMT (Updated: 13 Sep 2017 1:34 PM GMT)

டொனால்டு டிரம்ப் எச்சரிக்கையை அடுத்து நாங்கள் ஆதரவு அளிப்போம் என பாகிஸ்தானுக்கு ரஷியா, சீனா உறுதியளித்து உள்ளது.



மாஸ்கோ,

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியின் போது பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இப்போது டொனால்டு டிரம்ப் அரசு பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்காவின் தெற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவு குறித்து பேசிய டொனால்டு டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். 

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல்லாயிரம் கோடி கணிக்கில் நிதிஉதவி அளிக்கிறது. அதே நேரத்தில் நாம் யாரை எதிர்த்து சண்டையிட்டு வருகிறோமோ, அவர்களுக்கு அதே பாகிஸ்தான் சொர்க்கபுரியாகவும் உள்ளது. இதில் மாற்றம் வேண்டும். அமெரிக்க படைவீரர்களையும், அதிகாரிகளையும் இலக்காகக் கொள்கிற பயங்கரவாதிகளையும், போராளிகளையும் பாதுகாக்கிற நாட்டுடனான நட்புறவு தொடர முடியாது. 

தலீபான் மற்றும் இன்னும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக திகழ்ந்து கொண்டிருந்தால், அதை நாம் வெறுமனே இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என கடும் எச்சரிக்கையை விடுத்தார். கடும் விளைவுகளை பாகிஸ்தான் எதிர்க்கொள்ள வேண்டியவரும் எனவும் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். ஆப்கானிஸ்தானில் மீண்டும் படையின் எண்ணிக்கையையும் அமெரிக்கா உயர்த்துவது உறுதியாகி உள்ளது.

 டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளநிலையில் நாங்கள் ஆதரவு அளிப்போம் என பாகிஸ்தானுக்கு ரஷியா, சீனா உறுதியளித்து உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது. பிரிக்ஸ் அமைப்பு வெளியிட்ட பயங்கரவாத எதிர்ப்பு தீர்மானித்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அடுத்த நாளே சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தினால் பாதிகப்பட்டு உள்ளது, பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது, அதனை பாராட்ட வேண்டும் என்றது.

இதற்கிடையே பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு எதிரான எந்தஒரு தீர்மானமும் அமெரிக்காவிற்கு பலன் அளிக்காது என பாகிஸ்தான் கூறிஉள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா. சபையில் பொருளாதார தடை தீர்மானம் கொண்டுவந்தால், ரஷியா மற்றும் சீனா அதனை தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை (மறுப்பு வாக்குரிமையை) பயன்படுத்தி தடுக்கும் என இருநாடுகளும் தூதரக ரீதியில் உறுதியளித்து உள்ளது என பாகிஸ்தான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.

Next Story