தாவூத் இப்ராகிமின் சொத்துக்களை முடக்கியது இங்கிலாந்து அரசு


தாவூத் இப்ராகிமின் சொத்துக்களை முடக்கியது இங்கிலாந்து அரசு
x
தினத்தந்தி 13 Sep 2017 3:39 PM GMT (Updated: 13 Sep 2017 3:39 PM GMT)

தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான சுமார் ரூ.43 ஆயிரம் கோடி சொத்துக்களை பிரிட்டன் அரசு முடக்கி உள்ளது.


 
லண்டன்,  

இந்தியாவில் நடைபெற்ற 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதன்பேரில் பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்த நாடு தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என உறுதிபட மறுத்து வருகிறது. 

 உலக அளவில் 2–வது மிகப்பெரும் கோடீஸ்வர குற்றவாளியான தாவூத் இப்ராகிமை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. தாவூத் இப்ராகிமிற்கு பல்வேறு நாடுகளில் ஏராளமான சொத்துகள் உள்ளது. இங்கிலாந்தில் வார்விக்சையரில் ஒரு ஓட்டல் உள்பட மிட்லாந்து பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் தாவூத் இப்ராகிமிற்கு சொத்துக்கள் உள்ளது. சுமார் 21 மாற்று பெயர்களில் வாங்கியுள்ள இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு 6.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.43.55 ஆயிரம் கோடி) என மதிப்பிடப்பட்டு உள்ளது. தாவூத் இப்ராகிமுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சொத்துகளை இங்கிலாந்து அரசு முடக்கி உள்ளது. 

இவ்வருட தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அரசும் தன்னுடைய மண்ணில் தாவூத் இப்ராகிம் சொத்துக்களை முடக்கியது என சில உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகியது.

பாகிஸ்தான் உளவுத்துறை, பயங்கரவாத இயக்கங்களுடன் இந்தியாவில் தாக்குதலை நடத்திவிட்டு பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றிவரும் தாவூத் இப்ராகிமிற்கு அந்நாட்டு உளவுத்துறை பாதுகாப்பையும் கொடுக்கிறது.


Next Story