மரிலின் மன்றோ கல்லறை அருகே அடக்கம் செய்யப்படும் பிளேபாய் நிறுவனர்


மரிலின் மன்றோ கல்லறை அருகே அடக்கம் செய்யப்படும்  பிளேபாய் நிறுவனர்
x
தினத்தந்தி 30 Sep 2017 5:10 AM GMT (Updated: 30 Sep 2017 5:10 AM GMT)

மறைந்த பிரபல அழகி மரிலின் மன்றோ கல்லறை அருகே தன்னை அடக்கம் செய்ய ஏற்கனவே நிலம் வாங்கி போட்டு உள்ள பிளே பாய் நிறுவனர்.

உலகெங்கிலும் அதிக வாசகர்களை கொண்ட பிரபல கவர்ச்சி இதழான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹூக் ஹெப்னர். 91 வயதான இவர் வயோதிகம் காரணமாக  காலமானார்.

அமெரிக்காவில் சிக்காகோ நகரில் பிறந்த ஹூக் ஹெப்னர், 1953-ம் ஆண்டு ‘பிளேபாய்’ இதழை தொடங்கினார். இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையில் இருந்து அமெரிக்கா மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்த காலம் அது.

அப்போது ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்த மெர்லின் மன்றோவின் நிர்வாண புகைப்படத்தை அட்டையில் போட்டு, “நகைச்சுவை, நுட்பம் மற்றும் மசாலா” என்கிற தலைப்பிட்டு முதல் இதழினை வெளியிட்டார். போரினால் ஏற்பட்ட மனஅழுத்தங்களில் விடுபட அமெரிக்க மக்கள் ‘பிளேபாய்’ இதழுக்கு வாசகர் ஆனார்கள்.

‘பிளேபாய்’ இதழ் வெளியாக தொடங்கிய ஒரு வருட காலத்துக்குள் அதன் விற்பனை 2 லட்சம் பிரதிகளை எட்டியது. 5 வருடங்களுக்குள் அதன் விற்பனை 10 லட்சம் பிரதிகளாக உயர்ந்து, அமெரிக்க பத்திரிகைகளில் முதல் இடம் பிடித்தது.

1970-களில் இந்த இதழ் 70 லட்சம் வாசகர்களை கொண்டிருந்தது. பின்னர் 21-ம் நூற்றாண்டில் இணையப்பயன்பாடு அதிகரித்ததாலும், போட்டி பத்திரிகைகள் உருவானதாலும் அதன் விற்பனை 30 லட்சமாக குறைந்தது.

2015-ம் ஆண்டில், ‘பிளேபாய்’ இதழ் தனது அட்டை படத்தில் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டது

உயிரோடிருந்தபோது பிளேபாய் மாளிகையின் அந்தப்புரத்தில் இன்பத்தில் திளைத்திருந்த பிளேபாய் இதழின் நிறுவனர் ஹூக் ஹெப்னர், இறந்த பின்னும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை மரிலின் மன்ரோ கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்படுகிறார்.

பிளேபாய் முதல் இதழின் அட்டைப் படத்திற்காக போஸ் கொடுத்த மரிலின் மன்றோ  1962-ல் மரணித்தார். தனது 91 வயதில் இறந்த ஹெப்னர், 1992 - ம் ஆண்டே மர்லின் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே தன்னை புதைப்பதற்காக ஒரு இடத்தை 75,000 டாலருக்கு வாங்கி இருந்தார்.

இறப்புக்கு பிந்தைய தன் திட்டம்  குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸூக்கு ஒரு முறை பேட்டிக் கொடுத்த ஹெப்னர், "லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வெஸ்ட்வுட் வில்லேஜ் நினைவு பூங்காவில் திரை பிரபலங்களான நடாலியா வுட், டீன் மார்ட்டின் மற்றும் பரா பாவ்செட்டும் ஆகியோர் உட்பட தன்னுடைய பல நண்பர்கள் அடக்கம் செய்யபட்டு இருக்கிறார்கள். நான் இந்த உணர்வுகளில் நம்பிக்கை கொண்டவன். எல்லையில்லா நேரத்தை மரிலின் அருகில் செலவிடும் இனிமையான வாய்ப்பைத் தவிர்ப்பது மிகவும் கடினமானது, " என்று கூறி இருந்தார்.

இந்த விஷயத்தை மக்கள் இரு வேறு விதமாக பார்க்கிறார்கள். சிலர் இதனை நெகிழ்ச்சியான ஒரு விஷயமாக பார்க்கும்போது, வேறு சிலர் இதனை ஒழுக்கக் கேடான விஷயமாக பார்க்கிறார்கள்.

ஹெப்னரின் இந்த செயலை சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் புகழ்கிறார்கள்." எல்லையில்லா நேரத்தை மரிலின் அருகில் செலவிடும் இனிமையான வாய்ப்பைத் தவிர்ப்பது மிகவும் கடினமானது," என்று முன்பு ஹெப்னர் கூறியதை குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

ஆனால், வேறு சிலரோ 1953 டிசம்பர் மாதம் வெளியான பிளேபாய் முதல் இதழுக்காக போஸ் கொடுத்ததற்காக, மரிலின் வெட்கப்பட்டார். தன்னுடைய எதிர்காலம் இதனால் பாதிக்கப்படுமோ என்று அச்சப்பட்டார் என்று கூறுகிறார்கள்.

மரிலின் தனது நடிப்பு தொழிலில் ஏற்பட்ட தொய்வை ஈடுசெய்யவும் மற்றும் பண தேவைகளுக்காகவும் பிளேபாய் இதழுக்காக போஸ் கொடுத்தார். அதற்காக 50 டாலர்கள் ஊதியமாக பெற்றார்

அவருடைய வார்த்தைகளில் அவரது வாழ்க்கை` (Marilyn: Her Life in Her Own Words) புத்தகத்தில் இவ்வாறாக குறிப்பிடுபட்டுள்ளது : "மரிலினின் நிர்வாண புகைப்படத்தைவைத்து பல கோடி பொருளீட்டியவர்களிடமிருந்து நான் அதற்கான நன்றியை பெறவில்லை. என் படம் வெளியான முதல் இதழை எனக்கு யாரும் தரவில்லை. அதன் பிரதியை நான் தான் வாங்கினேன். "

Next Story