சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதால் பதற்றம் பாகிஸ்தானில் கலவரம்; துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி


சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதால் பதற்றம் பாகிஸ்தானில் கலவரம்; துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jan 2018 10:15 PM GMT (Updated: 11 Jan 2018 8:22 PM GMT)

பாகிஸ்தானில் ஒரு சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் மூண்டது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஒரு சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கசூர் நகரம். அந்த நகரத்தை சேர்ந்த ஜைனப் என்ற 7 வயது சிறுமி, கடந்த 4-ந் தேதியன்று, அதே பகுதியில் அமைந்துள்ள மத பள்ளிக்கூடத்துக்கு சென்றாள். ஆனால் அவள் வீடு திரும்பவில்லை.

அவளது பெற்றோர், அவளை தாய்மாமன்மாரிடம் ஒப்படைத்து விட்டு சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த நிலையில்தான் அவள் காணாமல் போனாள்.

இது தொடர்பாக அவளது தாய்மாமன்மார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன ஜைனப்பை தேடினர்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்தச் சிறுமி கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, அவளது உடல் எலைட் கல்லூரி அருகேயுள்ள வயல்வெளியில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவளது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கற்பழிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கசூர் மாவட்டத்தில், இப்படி சம்பவங்கள் நடப்பது தொடர்கதை ஆகி உள்ளது. கடந்த 3 மாதங்களில் நடந்துள்ள 6-வது சம்பவம் இது.

இது கசூர் மக்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், சிறுமி ஜைனப்பின் பெற்றோர் சவுதி அரேபியாவில் இருந்து நேற்று முன்தினம் ஊர் திரும்பினார்கள். அதைத் தொடர்ந்து சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இருப்பினும் இந்த சம்பவத்தில் நீதி வழங்கக்கோரி உள்ளூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அங்குள்ள போலீஸ் நிலையத்தையும், துணை கமிஷனர் அலுவலகத்தையும் முற்றுகையிட சென்றனர்.

அவர்களின் போராட்டத்தில் கலவரம் மூண்டது. போலீஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். துணை கமிஷனர் அலுவலகத்தை சூறையாட முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 2 பேர் குண்டுபாய்ந்து உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

ஆனால் படுகாயம் அடைந்த இருவரில் ஒருவர் லாகூர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்து விட்டதாக உள்ளூர்வாசி ‘தி நேஷன்’ பத்திரிகையிடம் தெரிவித்தார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

கசூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஜூல்பிகர் அகமதுவை நீக்கி முதல்-மந்திரி ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் ஆணையிட்டார். அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 4 போலீசாரும், 2 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

Next Story